கணவனின் சந்தேகத்தால் விபரீத முடிவு: திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
காரைக்காலில் கணவனின் சந்தேகத்தால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;
கோப்புப்படம்
காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி கிரீன் கார்டன் 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் ஹேமா (28 வயது). இவருக்கும், கும்பகோணம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வ முத்துக்குமரன் (31 வயது) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் 23-ந்தேதி திருமணம் நடைபெற்றது. செல்வ முத்துக்குமரன் பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். எனவே திருமணத்துக்கு பிறகு ஹேமா கணவருடன் பெங்களூரு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் ஹேமா மீது செல்வ முத்துக்குமரன் சந்தேகப்பட்டு, அவர் வேலைக்கு செல்லும்போது வீட்டுக்குள் வைத்து பூட்டிச்சென்றுள்ளார். மேலும் அவரது செல்போனை வாங்கி உடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தனது தாய் குமாரியிடம் ஹேமா கூறி, அழுதுள்ளார்.
இதுபற்றி முத்துக்குமரனின் தாயிடம் குமாரி கூறினார். அவர் பெங்களூரு சென்று கணவன், மனைவியை சமாதானம் செய்து, ஹேமாவை அழைத்துவந்து ஆடி மாதத்துக்காக அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். கணவரின் கொடுமையால் மன வருத்தத்தில் இருந்த ஹேமா இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து கோட்டுச்சேரி போலீசில் குமாரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காரைக்கால் துணை தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். கணவனின் சந்தேகத்தால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.