எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன - பிரதமர் மோடி
பெண்களின் அன்பும், ஆசீர்வாதமும் எங்களுக்கு மிகப்பெரிய பலத்தையும் ஆற்றலையும் கொடுக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
கவுகாத்தி,
அசாம் மாநிலம், திப்ருகார் மாவட்டத்தில் ரூ.10,601 கோடி மதிப்பில் உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
அசாம் மாநிலத்தை வளர்ச்சி அடைந்ததாக மாற்றுவதே எங்கள் நோக்கம். யூரியா உரத் தொழிற்சாலை உள்ளூர் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். அசாம் மாநில இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.உர ஆலையை நவீனமயமாக்கவும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் காங்கிரஸ் கட்சி எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் விவசாயிகளின் பிரச்சினைகளை புறக்கணித்து, ஊடுருவல்காரர்களை காப்பாற்றினர். ஓட்டு வங்கியை பாதுகாக்க காங்கிரஸ் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது.
காங்கிரஸ் ஆட்சியில் செய்த மோசமானவற்றை சரிசெய்ய எனக்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன காங்கிரஸ் ஆட்சியில் உருவான பிரச்சினைகளுக்கும் எங்கள் அரசு தீர்வு கண்டு வருகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க விவசாயிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, எங்கள் அரசு அவர்களுக்கு ஆதரவளிக்க அயராது உழைத்து வருகிறது.
பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் அசாம் மக்களின் நலனை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் அதிகாரித்தில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்களின் அன்பும், ஆசீர்வாதமும் எங்களுக்கு மிகப்பெரிய பலத்தையும் ஆற்றலையும் கொடுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.