அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் அரசு வீட்டை காலி செய்துவிடுவேன் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
டெல்லியில் நடைபெற்ற நீதிபதி சுதான்ஷு டி.துலியாவின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கலந்து கொண்டார்.;
கோப்புப்படம்
ஓய்வு பெறும் நேரத்தில், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி விடுவேன் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அனுமதிக்கப்பட்ட கால அவகாசத்தை கடந்த பிறகும், தனது அதிகாரபூர்வ அரசு இல்லத்தை காலி செய்யவில்லை என சுப்ரீம் கோர்ட்டு நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அப்போது, உடல் நலம் குன்றிய தனது மகள்களுக்கு ஏற்ற வகையிலான வீட்டை ஏற்பாடு செய்வது கடினமாக இருந்ததால், அதிகாரபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதை நீட்டித்ததாக சந்திரசூட் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் நீதிபதி சுதான்ஷு டி.துலியாவுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. அதில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசுகையில், "நீதிபதி துலியாவை சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோதுதான் எனக்குத் தெரியும். அவருக்கும், எனக்கும் அதற்கு முன் தொடர்பு கிடையாது. நீதித்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்.
ஓய்வு பெற்றவுடன் உடனடியாக தனது அரசு இல்லத்தை காலி செய்யும் நீதிபதிகளில் ஒருவராக அவர் இருப்பார். உண்மையில் அது ஒரு அரிதான விஷயம். நானும் அதைச் செய்யக்கூடிய நிலையில் இருப்பேன். ஏனென்றால், நவம்பர் 24-ம் தேதி வரை எனக்கு மாற்று வீட்டைக் கண்டுபிடிக்க நேரம் கிடைக்காது. ஆனால், விதிகளின்படி அனுமதிக்கப்பட்ட நேரம் எதுவோ, அதற்கு முன்பு நான் காலி செய்துவிடுவேன்" என்று கூறினார்.