பெண் கேட்டு வீட்டுக்கு வந்த மகளின் காதலன்... தாய் எடுத்த விபரீத முடிவால் பறிபோன 3 உயிர்

சத்திய பாலனும், அஞ்சலியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்;

Update:2025-04-13 09:59 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எருமேலியை சேர்ந்தவர் சத்தியபாலன் (வயது52). இவருடைய மனைவி ஸ்ரீஜா (50). இவர்களுக்கு அஞ்சலி (26) என்ற மகளும், அகிலேஷ் (22) என்ற மகனும் இருந்தனர். சத்தியபாலன் அந்த பகுதியில் ஒலிப்பெருக்கி நிலையம் நடத்தி வந்தார். மகள் அஞ்சலி வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறைக்கு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதே போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அஞ்சலி ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் அஞ்சலி தனது தந்தை நடத்தி வந்த நிறுவனத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு அஞ்சலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அஞ்சலியை காதலிக்கும் வாலிபர் தனது நண்பர்கள் சிலருடன் அஞ்சலி வீட்டுக்கு பெண் கேட்டு வந்தார். இதனால் அஞ்சலியின் பெற்றோர் ஆத்திரமடைந்தனர். அவர்கள் பெண் கேட்டு வந்தவர்களை அனுப்பி வைத்துவிட்டு அஞ்சலியை கண்டித்தனர். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீஜா, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு கணவரின் நிறுவனத்தில் பயன்படுத்துவதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதனால் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்தியபாலன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரும் ஸ்ரீஜாவை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களின் மீதும் தீப்பற்றி கொண்டது. இதனால் 3 பேரும் உடல் கருகி பலத்த தீக்காயம் அடைந்தனர்.

மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தன. இதில் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த ஸ்ரீஜாவின் மகன் அகிலேசும் பலத்த தீக்காயம் அடைந்தார். இதற்கிடையே சத்தியபாலனின் வீடு தீப்பிடித்து எரிந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அங்கு சத்யபாலன், ஸ்ரீஜா, அஞ்சலி மற்றும் அகிலேஷ் ஆகிய 4 பேரும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கோட்டயம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஸ்ரீஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்திய பாலனும், அஞ்சலியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த அகிலேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து எருமேலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்