முன்னாள் முதல்-மந்திரி மறைவு: ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.;
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஷிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
ஷிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஆவார். ஷிபு சோரன் தற்போதைய ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டு வரும் ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.
இதனிடையே, கிட்னி தொடர்பான பிரச்சினை காரணமாக கடந்த ஒரு மாதமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிபு சோரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஷிபு சோரன் மறைவையொட்டி ஜார்க்கண்ட்டில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்று முதல் 6ம் தேதிவரை அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கட்டிடங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.