அமர்நாத் யாத்திரை: 1.82 லட்சம் பேர் தரிசனம்
நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு- காஷ்மீரில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைப்பகுதியில் இந்து மதக்கடவுள் சிவன் கோவில் உள்ளது. பனிசூழ்ந்த மலையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கிய நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 1 லட்சத்து 82 ஆயிரத்து 746 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
அதேவேளை, நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் பனி லிங்கத்தை தரிசிக்க இன்னும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.