திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
ஜனாதிபதிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.;
திருமலை,
ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு 4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அங்கு நேற்று சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, பத்மாவதி தாயார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அதிகாரிகள் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கினர்.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் ஜனாதிபதி, ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து, தீர்த்த பிரசாதம் வழங்கினர். ஜனாதிபதியின் வருகையையொட்டி, திருமலையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.