பாலாறு மாசுபடுவதை தடுக்கக் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வேதனை

பாலாறு மாசுபடும் விவகாரத்தில் நாங்கள் பிறப்பித்த உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.;

Update:2025-08-11 17:01 IST

புதுடெல்லி,

வட தமிழ்நாட்டின் ஜீவநதியான பாலாறு கடந்த 30 ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால், பாலாற்றின் வளம் சீரழிக்கப்பட்டு நஞ்சாக மாறியுள்ளது. முன்னொரு காலத்தில் பாலாற்றால் செழித்தோங்கிய வாழை, கரும்பு, தென்னை, நெல் உற்பத்தி சுருங்கி விவசாயத்தை விவசாயிகள் மறக்கச் செய்து விட்டன. இது ஒரு வகையிலான திட்டமிட்ட சுற்றுச்சூழல் சீரழிப்பு என்றே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரக்க கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் விடப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி பர்தி வாலா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி

பாலாறு மாசுபடும் விவகாரத்தில் நாங்கள் பிறப்பித்த உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருக்கக் கூடாது. ஆயிரக்கணக்கான லிட்டர் கழிவு நீர், ஆற்றில் கலந்தால் அதன் நிலை என்ன ஆவது?

ஆற்றில் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை நாம் தடுக்க வேண்டும். நம்முடைய நாட்டில் ஆற்று நீரை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றார்கள் அவ்வாறு இருக்க இவ்வாறு மாசு ஏற்படுத்துவது எவ்வளவு பெரிய கேட்டை விளைவிக்கிறது. இதை நாம் தடுக்க வேண்டாமா ? கூட்டு முயற்சியினால் மட்டுமே இதனை தடுக்க முடியும் அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் இருக்கக்கூடிய தீவிரத்தை கருத்தில் கொண்டு கூறுகிறோம். இவ்வாறு தொடர்ச்சியாக கழிவு நீரை கழிவுகளை ஆற்றில் கொட்டுவதால் இயற்கை நம்மை சும்மா விடாது.வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட கலெக்டர்கள் ஆஜராகியுள்ளீர்கள். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் பாலாறு மாசுபடுவதை தடுக்க தவறிவிட்டீர்கள்.

பாலாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. நாங்கள் பிறப்பித்த உத்தரவு காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது. உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். பாலாறு மாசுபடுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். மக்கள் நலனை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாவட்ட கலெக்டர் எனும் உயர்ந்த பதவியில் இருக்கிறீர்கள். உங்களுடைய சேவை மிகவும் தேவை. நீங்கள் முயற்சி செய்யாதவரையில் எதுவும் நடக்காது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து செயல்படுங்கள். இதில் கூட்டு முயற்சி வேண்டும். அப்போதுதான் சாதாரண மனிதர்கள் நலம் பெற முடியும்

இல்லை என்றால் நாங்கள் பிறப்பித்த உத்தரவு காகிதத்தில் மட்டுமே இருக்கும். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது தொடர்பாக விளக்கம் தாக்கல் செய்யுங்கள். கூட்டு முயற்சி மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட மூன்று மாவட்ட கலெக்டர்களும் உயர்ந்த பதவியில் இருக்கின்றீர்கள். யார் தவறு செய்தாலும் தண்டியுங்கள். அதிகாரமிப்பவர்களாக இருந்தாலும் யாரையும் விட்டு விடாதீர்கள். இயற்கையை கைவிட்டு விடாதீர்கள். இயற்கையை நீங்கள் கைவிட்டால் இயற்கையும் உங்களை கைவிட்டு விடும்.

பாலாறு மாசுபாட்டை கட்டுப்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும். முறையாக தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படவில்லை என்றால் அது நேரடியாக ஆற்றில் கலப்பது பெரும் அபாயகரமானது. எனவே இது குறித்து உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் மாவட்ட கலெக்டர்கள் ஆகிய நீங்கள் தான் முன் உதாரணமாக திகழ வேண்டும். பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? எடுத்தீர்கள் ? என்பதை அடுத்த விசாரணையின் போது எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்” என அறிவுறுத்தினார்.

மேலும் இந்த வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்