என்ஜினீயரை கொன்று நகை, பணம் கொள்ளை; தப்பி ஓடிய வேலைக்கார பெண்ணுக்கு வலைவீச்சு
என்ஜினீயரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற வேலைக்கார பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.;
நகரி,
ஆந்திர மாநிலம் விஜயவாடா என்.டி.ஆர். காலனியை சேர்ந்தவர் வெங்கட்ராமராவ் (வயது 67). ஓய்வுபெற்ற என்ஜினீயர். இவரது மனைவி இறந்து விட்டார். மகள்களுக்கு திருமணமாகி விட்டதால், 92 வயது தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்தார்.தனது தாயாரை கவனித்துக்கொள்வதற்காக புரோக்கர் மூலமாக அனுஷா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தி இருந்தார். அவர் சரஸ்வதியை கவனித்து வந்தார்.
வேலை முடிந்ததும் அனுஷா இரவில் அங்கேயே தங்குவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று அவர் தங்கவில்லை. நள்ளிரவு நேரத்தில் சரஸ்வதி, அனுஷாவை அழைத்தார்.ஆனால் அவர் வரவில்லை. மேலும் மகன் வெங்கட்ராமராவையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சரஸ்வதி, படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து வந்து பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அவரது மகன் வெங்கட்ராமராவ், மூச்சு பேச்சு இன்றி பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த சரஸ்வதி உடனே உறவினர்கள் மூலமாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
வேலைக்கார பெண் அனுஷா மாயமாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று அனுஷா மற்றொருவருடன் வீட்டுக்கு வந்து தலையணையால் அமுக்கி என்ஜினீயரை கொலை செய்து உள்ளார். பின்னர் பீரோவில் இருந்த பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும், ரூ.90 ஆயிரத்தையும், தங்கநகைகளையும், பட்டுச்சேலைகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விட்டனர். தடயத்தை அழிக்கும் நோக்கத்தில் பிணத்தின் மீது மிளகாய் பொடியை தூவி உள்ளார்.இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து வேலைக்கார பெண் அனுஷாவையும், அவருடன் வந்தவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தேடப்படும் அனுஷா, தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டையை சேர்ந்தவர். திருமணமான அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மே மாதத்தில் உபேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நுலக்கபேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளார். இருவரும் சேர்ந்துதான் என்ஜினீயரை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.விஜயவாடாவில் இருந்து இருவரும் திருப்பதி செல்லும் பஸ்சில் சென்றதை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக போலீசார் கண்டறிந்தனர். எனவே கொலையாளிகளை பிடிக்க போலீசார் திருப்பதி விரைந்துள்ளனர்.