கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சின்ன வீராம்பட்டினத்தில் நண்பர்களின் கண் முன்னே கடல் அலையில் சிக்கி சென்னை கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-09 17:43 GMT

அரியாங்குப்பம்

சின்ன வீராம்பட்டினத்தில் நண்பர்களின் கண் முன்னே கடல் அலையில் சிக்கி சென்னை கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கல்லூாி மாணவர்

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 45). இவரது மகன் அஸ்வின் (18). அங்குள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் முகரம் பண்டிகை விடுமுறையையொட்டி இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.

புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த அவர்கள் இன்று காலை சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு 7 பேரும் வாடகை சைக்கிளில் தனித்தனியாக சென்றனர். அங்கு முகத்துவாரத்தில் அஸ்வின் தனது நண்பர் ஒருவருடன் குளித்துள்ளார். மற்ற 4 பேரும் கரையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது ஏற்பட்ட சுழலில் சிக்கி அஸ்வின் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் உதவி கேட்டு கூச்சல் போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அரியாங்குப்பம், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் கடலில் குதித்து ஒரு மணிநேர தேடலுக்குப்பின் மயங்கிய நிலையில் அஸ்வின் மீட்கப்பட்டார். அங்கிருந்து அவரை காரில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஸ்வின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் சக நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் உயிர்ப்பலி

சின்ன வீராம்பட்டினம் கடல் முகத்துவாரத்தில் குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதைமீறி பலர் குளித்து வருகின்றனர். இதே பகுதியில் கடந்த மாதம் 2 பேர் இறந்தனர். கடலில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க 'உயிர் காப்பான்' எனும் பெயரில் சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சரிவர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிர்ப்பலி ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. உயிர் பலியை தடுக்க சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் குளிக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்