சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் பலி
இந்த வெடி விபத்தின் போது தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.;
விருதுநகர்,
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்துகொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் வெடி விபத்தால் 4-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
இந்த வெடிவிபத்தில் முதற்கட்டமாக 2 பெண்கள் 3 ஆண்கள் என 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஆலையில் தொடர்ந்து பட்டாசு வெடித்து சிதறுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசு ஆலையின் போர்மேனை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.