போலி பேராசிரியர்கள் விவகாரம்: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மாற்றம்?
போலி பேராசிரியர்கள் விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.;
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில், பல கல்லூரிகள் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பணிபுரிவதாகக் காட்டின. இந்த முறைகேடு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த வேல்ராஜுவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாமல் 11 அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாசும் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் போலி பேராசிரியர் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக தெரிவித்து பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் அதிகாரிகளை அவர்கள் வகித்து வந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பதிவாளர் பிரகாஷை பதவியிலிருந்து மாற்ற பல்கலைக்கழக சிண்டிகேட் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை உயர்கல்வித்துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.