பைக் மீது பள்ளி பேருந்து மோதிய விபத்தில் தந்தை பலி: மகள் படுகாயம்
நாட்டு வைத்தியரை பார்க்க தந்தை-மகள் மோட்டார் பைக்கில் சென்றனர்.;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் உத்தரப்பன் (வயது 62). அவரது மகள் அய்யம்மாள்(40). இருவரும் சம்பவத்தன்று கழுகுமலை அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள நாட்டு வைத்தியரை பார்க்க மோட்டார் பைக்கில் சென்றனர். அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் ஊருக்கு மோட்டார் பைக்கில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
சங்கரலிங்கபுரம்-கோவில்பட்டி சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கோவில்பட்டி தனியார் பள்ளிப் பேருந்து, அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் உத்தரப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உத்தரப்பன் உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த அய்யம்மாளை போலீசார் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி பேருந்தின் டிரைவர் வரதராஜனிடம்(52) விசாரணை நடத்தினர்.