பொங்கல் எதிரொலி... கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், தேவையான பாரம்பரியப் பொருட்களை முன்கூட்டியே வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வெல்லம் போன்றவை பண்டிகையின் முக்கிய அடையாளங்களாக இருப்பதால், அவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், கரும்பு, வாழை, மஞ்சள் கொத்து, இஞ்சி, வெல்லம் போன்ற பிற பொங்கல் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கோயம்பேடு அங்காடி நிர்வாகம் சார்பில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேலும் பல லாரிகளில் கரும்புகள் வந்த வண்ணம் உள்ளன. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, கரும்பின் தரத்தைப் பொறுத்து ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருசிலர் ஒரு கட்டு ரூ.800 வரையிலும் விற்பனை செய்தனர். அதேபோல, மஞ்சள் குலை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.