சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கு இலவச பயிற்சி: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு பயில அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், மற்றும் நியூசிலாந்து போன்ற முன்னணி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு பயில அடிப்படையான International English Language Testing System (IELTS) சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியினை பெற 18 முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான கால அளவு ஒன்றரை மாதமும் விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகையை தாட்கோவால் ஏற்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.