சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக சேமித்து வைத்திருந்த கொப்பரைத் தேங்காய் அனைத்தும் சேதமடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதற்கு காப்பீடு செய்ததன் அடிப்படையில் இழப்பீடு கோரியுள்ளார். ஆனால் இது இழப்பீட்டுக்கு பொருந்தாது என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து, உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் அதிகப்படியாக காப்பீட்டு தொகை ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 500, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.2 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.5 லட்சத்து 47 ஆயிரத்து 500-ஐ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.