திருமணம் செய்வதாக கூறி உல்லாசம்: இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
கோப்புப்படம்
சென்னை,
அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மாதவரத்தைச் சேர்ந்த தீபக்குமார் என்பவர் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் இது காதலாக மாறியது.
இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்குமார், அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தீபக்குமார் அந்த பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்யவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன்னை காதலித்து ஏமாற்றிய தீபக்குமார் மீது அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீபக்குமாரை கைது செய்தனர்.