தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.;
தூத்துக்குடி,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் இன்று காலை வரை தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்துள்ளது. குழந்தைகள் வார்டு பகுதி, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராட்சத பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.