காவல் துறை அதிகாரத்தின் பக்கம் தான் நிற்கும் - இயக்குனர் அமீர் பேட்டி
காவல்துறை என்பது மக்கள் பக்கம் இல்லை. அது அதிகாரத்தின் பக்கம்தான் நிற்கிறது என்று இயக்குநர் அமீர் கூறினார் .;
சென்னை,
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு தமிழக அரசு மாற்றியுள்ளது. எதிர்க்கட்சிகள், அஜித்குமாரின் விவகாரத்தில் போலீசாருக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரி யார் என கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் அமீர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:"காவல்துறை என்பது மக்கள் பக்கம் இல்லை. அது அதிகாரத்தின் பக்கம்தான் நிற்கிறது. செல்வந்தர்கள் பக்கம்தான் நிற்கும்; இதுதான் வரலாறு. எங்காவது ஒன்று, இரண்டு சூழலில், போலீசார் தங்கள் மனசாட்சிக்கு பயந்து மக்கள் பக்கம் நிற்பார்கள். ஆனால், பொதுவாக தனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிக்கு கட்டுப்பட வேண்டும். அந்த அதிகாரி தனக்கு மேல் உள்ள அதிகாரத்திற்கு கட்டுப்படுவார்.
இதுதான் காவல்துறையின் சிஸ்டம். இதில் யாரையும் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சிறப்பு படை உள்ளே வந்து அடித்தது என்றால், சும்மா செல்வோரை அடிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது. அது யார்? அதிகாரிகள் மேல் மட்டும்தான் தப்பு என்று நான் சொல்ல வரவில்லை. உங்கள் வீட்டு பிள்ளையை அடி என்றால் அடிப்பார்களா? பல நூறு வருடங்களாக இப்படி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்."இவ்வாறு அவர் பேசியுள்ளார்.