நாய்க்கடியில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்தது தான் தி.மு.க அரசின் 4 ஆண்டுகால சாதனை - நயினார் நாகேந்திரன்
தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் தி.மு.க அரசைக் கண்டித்து பல போராட்டங்களைத் தமிழக பா.ஜ.க முன்னெடுக்கும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 3.67 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். நடப்பாண்டில் 20 பேர் நாய்க்கடியால் உயிரிழந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு ஆளும் தி.மு.க அரசின் நிர்வாக லட்சணத்தையும் நமக்கு தோலுரித்துக் காட்டுகின்றன. நாட்டிலேயே நாய்க்கடியில் தமிழகத்தை முதலிடத்தில் தூக்கி நிறுத்தியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனையா?.
தி.மு.க அரசின் அலங்கோல ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் ஏற்கனவே உயிர்பயத்தில் வாழும் தமிழக மக்கள். கட்டுக்கடங்காமல் பெருகி வரும் தெருநாய்களின் தொல்லையால் தற்போது பொதுவெளியில் நடமாடுவதற்கே அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெருவில் திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்தும் திராணியற்ற ஆளும் அரசு. நல்ல ரக நாய்களை நாங்களே விற்கிறோம் எனக் கிளம்பியுள்ளது வேடிக்கையானது.
தமிழக மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்னென்ன? அவர்களின் தேவை என்ன? ஒரு அரசின் கடமை என்ன? என்பது குறித்த சிந்தனை கூட இல்லாத தி.மு.க அரசு. தங்களுக்குப் பிடித்த பொழுது போக்குகளைத் திட்டங்களாகத் தீட்டி அதற்கு மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி ஒரு சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு போட்டோஷூட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் முதல்வரை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தெருநாய்களின் எண்ணிக்கையும், ரேபிஸ் பாதிப்புகளும் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட "தமிழ்நாடு மாநில நாய் இனப்பெருக்கக் கொள்கை" என்னவானது? ஒவ்வொரு ஆண்டும் விலங்குகள் நலனுக்காக ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதி எங்கே போனது?.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி கிடைக்கிறதா? நாய்க்கடிக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றனவா? தங்கள் மாநிலத்தின் தெருநாய்களைக் கொண்டு வந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்ற கேரள அரசை இதுவரைக் கண்டிக்காதது ஏன்? போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.’
ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தெருநாய்களின் இனப்பெருக்கத்தையும், ரேபிஸ் நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தி.மு.க அரசு துரிதப்படுத்த வேண்டும். இல்லையேல் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் தி.மு.க அரசைக் கண்டித்து பல போராட்டங்களைத் தமிழக பா.ஜ.க முன்னெடுக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.