கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது.;
குமரி,
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மார்கழி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. இந்த தேரோட்டத்தை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் சுசீந்திரத்திற்கு இன்று வருவார்கள். தேராட்டத்தை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேரோட்டத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சுசீந்திரத்திற்கு இன்று, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சுசீந்திரத்தில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வாகனங்கள் ஆசிரமம் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்படும். இதுபோல் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்படும். மேலும் பக்தர்கள் வரும் வாகனங்கள் ஆசிரமம் புறவழிச்சாலை பகுதியில் நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.