விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. பிள்ளையார்பட்டி மோதகம் செய்வது எப்படி..?

தித்திக்கும் சுவை கொண்ட பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் மோதகம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது.;

Update:2025-08-26 17:57 IST

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. விநாயகர் வழிபாட்டில் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் என விதவிதமான நைவேத்யங்கள் இடம்பெற்றாலும் மோதகம் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. எனவே, பூஜை செய்பவர்கள், சில நைவேத்யங்களை தவிர்த்தாலும் மோதகத்தை மட்டும் மறப்பதில்லை.

மோதகம் என்பது தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பதார்த்தம் ஆகும். அதிலும் தித்திக்கும் சுவை கொண்ட பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் மோதகம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது. இந்த ரெசிபியை எப்படி செய்வது? என்பது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி- 1 கப்

பாசிப்பருப்பு - அரை கப்

தேங்காய் துருவல் - அரை கப்

வெல்லம் - 2 கப்

நெய்- தேவையான அளவு

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி தனித்தனியாக உலர வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் பச்சரியை லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். அதே கடாயில் பாசிப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். இரண்டையும் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

அரிசியும், பருப்பும் சேர்த்து எத்தனை கப் வருகிறதோ? அதற்கேற்ப வெல்லம் எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி லேசாக சூடாக்க வேண்டும். வெல்லம் நன்கு கரைந்த பின் இதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதையடுத்து அடி கனமுள்ள கடாயில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதனுடன் சிறிதளவு நெய், ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் கொதி வருவதற்கு முன்னதாக அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறிவிட்டு 3 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். கட்டி இல்லாமல் அவ்வப்போது கிளறி விடவும்.

ஒரு நிமிடத்திற்குப் பிறகு இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கலந்துகொள்ளவும்.

பின்னர் இதை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சூடு குறைந்ததும், கையில் நெய் தடவி விட்டு உருண்டையாக பிடித்து வைக்கவும். தேவைப்பட்டால் அச்சுகளைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் செய்துகொள்ளலாம்.

இவ்வாறு பிடித்து வைத்துள்ள மோதகத்தை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும். சுவையான மற்றும் ஸ்பெஷல் பிள்ளையார்பட்டி கோவில் மோதகம் தயார். 

Tags:    

மேலும் செய்திகள்