ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.;
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த 2 அணைகளும் முழுமையாக நிரம்பி விட்டன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் மொத்தமாக வினாடிக்கு 37 ஆயிரத்து 403 கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நீர் கர்நாடக, தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 32,000 கன அடியாக இருந்த நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடைவிதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் 8வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.