பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 84 அடியை நெருங்குகிறது.;
ஈரோடு,
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.
கடந்த மாதம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 83 அடியை கடந்தது. அதன்பின்னர் கடந்த ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 84 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4 ஆயிரத்து 52 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 83.90 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,577 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 83.68 அடிக்கு நீர் மட்டம் உள்ளது. நீர் இருப்பு 17.71 டி.எம்.சி. ஆக உள்ளது. கால்வாய் மற்றும் ஆற்றின் வழியே வினாடிக்கு 855 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.