10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்ற நிலைகளை கடந்து, தற்போது புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா' என பெயரிடப்பட்டு இருக்கிறது. மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல், தற்போது சென்னைக்கு 550 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் புயல் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திராவுக்கு புயல் செல்வதால், தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்காதோ? என்ற பேச்சு இருக்கிறது. ஆனால் வட மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.