தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது;
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் - மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணிநேரத்தில் வலுகுறையக்கூடும். மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது.
மத்திய மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் தெற்க்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வரும் 27ம் தேதி கரையை கடக்கும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.