தென்காசியில் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று மஞ்சள் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-24 10:42 IST

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று (மே 24) மஞ்சள் எச்சரிக்கையும், நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்யும் போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின் கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை/வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது. வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்

வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார்/ குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசர கால கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04633-290548 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்