சீனாவில் பயங்கர புயல்: 800 விமானங்கள் ரத்து
புயல் காரணமாக ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.;
பீஜிங்,
சீன தலைநகர் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது. மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. எனவே விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அங்கு 800-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகினர்.