நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.;
வாஷிங்டன்,
உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியது நான்தான் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்தார். ஆனால், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்திருந்தது.
இந்த சூழலில், அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் மூனீர், போர் நிறுத்தம் தொடர்பாக ஜனாதிபதி ரம்புவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம் என பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து டிரம்புக்கு நோபல் பரிசு வழங்குவது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரலாகின. அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரை செய்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி கொண்டாலும் தனக்கு நோபர் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
இந்தநிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் டிரம்ப்பை பரிந்துரை செய்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு வந்த டிரம்பின் பங்கு வரலாற்று சிறப்புமிக்கது என்று தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகளில் தற்போது வரை 1906இல் தியோடர் ரூஸ்வெல்ட், 1919இல் உட்ரோ வில்சன் மற்றும் 2009இல் பராக் ஒபாமா ஆகியோர் மட்டுமே அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர்.