'பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் சலிப்படைந்துவிட்டனர்' - அசோக் கெலாட்

பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதிகளால் நாட்டு மக்கள் சலிப்படைந்துவிட்டதாக அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-04 09:58 GMT

ஜெய்ப்பூர்,

பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க நாட்டு மக்கள் ஆர்வம் காட்டவில்லை என ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"நாடு முழுவதும் மக்கள் பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்துவிட்டனர். வாக்கு சதவிகிதம் குறைவதற்கு முக்கிய காரணம், மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்பதுதான். பா.ஜ.க.வினர் வேட்பாளர்களை முன்னிறுத்தாமல் பிரதமர் மோடியின் பெயரிலேயே வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாதது குறித்து பிரதமர் மோடி விமர்சிக்கிறார். ஆனால் அவரே தப்பி ஓடியவர்தான். அவருக்கும் வாரணாசிக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது, அவர் ஏன் குஜராத்தில் இருந்து வந்து வாரணாசியில் போட்டியிடுகிறார்?

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாங்கல்யத்தை பறித்துவிடும் என்பது போன்ற அடிப்படையற்ற பேச்சுக்களை பிரதமர் பேசி வருகிறார். இது வெளிப்படையான தேர்தல் நடத்தை விதிமீறலாகும். இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்."

இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்