சென்னையில் பெண்களுக்கு 'பிங்க்' நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

பிங்க் நிற மையங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே.

Update: 2024-04-18 07:55 GMT

சென்னை,

நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 19) தொடங்கி வரும் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் சிரமமின்றியும் கால தாமதமின்றியும் ஓட்டு போடுவதற்கு வசதியாக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 3 ஆயிரத்து 726 வாக்குச்சாவடிகள் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 685 பதற்றமான வாக்குச்சாவடிகளும், 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாடிகளும் என 708 வாக்குச்சாவடிகள் இதில் அடங்கும்.

இந்த நிலையில், சென்னையில் 16 இடங்களில் பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவர்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்தளம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே. கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவார்கள் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்