'பிரதமர் மோடி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்' - அமித்ஷா பேச்சு
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. இடஒதுக்கீடு பா.ஜ.க.வால் அகற்றப்படாது என அமித்ஷா தெரிவித்தார்.;
Image Courtesy : ANI
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் வரவில்லை.
ராமர் கோவில் விவகாரத்தை காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் சுமார் 70 ஆண்டுகளாக இழுபறியில் வைத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், நீங்கள் மோடியை 2-வது முறை பிரதமராக்கியபோது அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்திக் காட்டினார்.
பா.ஜ.க. 400 இடங்களில் வெற்றி பெற்றால், இடஒதுக்கீட்டை அகற்றிவிடும் என்று ராகுல் காந்தி உண்மைக்கு மாறாக பேசி வருகிறார். இரண்டு முறை ஆட்சி செய்த பா.ஜ.க., இட ஒதுக்கிடை அகற்றவில்லை. பிரதமர் மோடி ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. இடஒதுக்கீடு பா.ஜ.க.வால் அகற்றப்படாது. அதை வேறு யாரும் அகற்றவும் நாங்கள் விடமாட்டோம்."
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.