பெங்களூரு அபார பந்துவீச்சு.. பஞ்சாப் 157 ரன்கள் சேர்ப்பு
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33 ரன்கள் அடித்தார்.;
முல்லான்பூர்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஆர்யா 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரளவு நல்ல அடித்தளம் அமைத்தனர். இவர்களில் பிரியன்ஷ் ஆர்யா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே பிரம்சிம்ரன் சிங்கும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பஞ்சாப் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும், நேஹல் வதேரா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஜோஷ் இங்கிலிஸ் 29 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.
இறுதி கட்டத்தில் ஷசாங்க் சிங் ( 31ரன்கள்), மார்கோ ஜான்சன் ( 25 ரன்கள்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் பஞ்சாப் அணி ஒரளவு நல்ல நிலையை எட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் அடித்துள்ளது. பெங்களூரு தரப்பில் குருனால் பாண்ட்யா மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு களமிறங்க உள்ளது.