‘விளையாட்டு மூலம் நான் உணர்ந்த மகிழ்ச்சியை அனைவரும் உணர வேண்டும்’ - சச்சின் டெண்டுல்கர்
எல்லா காலநிலையிலும் கிரிக்கெட்டை மகிழ்ந்து விளையாடுவேன் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.;
மும்பை,
மும்பையில் நடந்த தனது புதிய நிறுவனத்தின் தொடக்க விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
“குறுகலான தெருவில் இருந்து பெரிய மைதானங்கள் வரை, கிராம மைதானம் முதல் நகரத்தின் அரங்குகள் வரை விளையாட்டு தரும் அந்த புன்னகை மட்டும் மாறாமல் உள்ளது. சிறுவனாக இருந்த போது மழை, வெயில் என எல்லா காலநிலையிலும் கிரிக்கெட்டை மகிழ்ந்து விளையாடுவேன். இந்தியாவுக்காக விளையாட மைதானத்துக்குள் இறங்கும் போது என்ன மகிழ்ச்சி கிடைக்குமோ, அதே மகிழ்ச்சி இன்றும் எனக்கு உள்ளது.
இந்தியா விளையாட்டை விரும்பும் நாடு என்பதில் இருந்து, விளையாடும் நாடாக மாறுவதை காண வேண்டும் என்பதே எனது தொலைநோக்கு பார்வை. பள்ளத்தாக்கு முதல் மைதானம் வரை அனைத்து இடங்களிலும் அனைவரும் விளையாட வேண்டும். விளையாட்டு மூலம் நான் உணர்ந்த மகிழ்ச்சியை அனைவரும் உணர வேண்டும். ஒரு விளையாட்டை விளையாடும் போது அது உங்களை உலகின் உச்சத்தில் இருப்பதை போல உணர வைக்கும். எனவே விளையாட தொடங்குகள். விளையாடுவதை நிறுத்தாதீர்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.