இந்தியாவில் ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பை... நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் மைதானங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.;
image courtesy:twitter/@ICC
துபாய்,
13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி முதல் நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடர் முதலில் இந்தியாவில் மட்டுமே நடைபெற இருந்தது. ஆனால் அண்மையில் முடிவடைந்த ஆண்களுக்கான சாம்பியன்ஸ் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அதற்குரிய போட்டிகள் அனைத்தும் துபாயிக்கு மாற்றப்பட்டன. அதன்படி பாகிஸ்தானும் இந்தியாவுக்கு செல்லாது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.-யிடம் முறையிட்டது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான மைதானங்களை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவின் பெங்களூரு, கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மைதானங்களிலும், இலங்கையின் கொழும்பு மைதானத்திலும் நடைபெற உள்ளன.
பெங்களூருவில் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றால் அரையிறுதியின் முதல் போட்டி கொழும்புவில் நடைபெறும். ஒருவேளை பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டாவிட்டால் கவுகாத்தியில் நடைபெறும். 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இறுதிப்போட்டி நவ.2ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்புவில் (பாகிஸ்தான் தகுதி பெற்றால்) நடைபெறும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.