ஐ.பி.எல்.2026: ஆர்சிபி அணியின் உள்ளூர் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றம்..?

ஆர்சிபி வெற்றி விழா பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.;

Update:2025-11-13 13:27 IST

image courtesy:PTI

பெங்களூரு,

இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்தே ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முதல் 17 ஆண்டுகள் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. அந்த அணியின் 18 ஆண்டு கால ஏக்கம் இந்த ஐ.பி.எல். சீசனோடு தணிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு கடந்த ஜூன் 4-ம் தேதி சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின் சின்னசாமி மைதானத்தில் எந்தவித போட்டிகளும் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. அண்மையில் முடிவடைந்த மகளிர் உலகக்கோப்பையில் பெங்களூருவில் நடைபெற இருந்த போட்டிகள் நவிமும்பைக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் ஆர்சிபி அணியின் உள்ளூர் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் இருந்து மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பெங்களூரு அணியின் உள்ளூர் போட்டிகள் அனைத்தையும் புனேவில் நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பேச்சுவார்த்தை இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்