நிஜகத் கான் அரைசதம்: இலங்கை அணிக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹாங்காங்
ஹாங்காங் தரப்பில் அதிகபட்சமாக நிஜகத் கான் 52 ரன்கள் எடுத்தார்.;
Image Courtesy: @ACCMedia1 / @CricketHK / X (Twitter) / File Image
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 2வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் இலங்கை அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் புகுந்தது. ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்களாக ஜீஷான் அலி, அன்ஷுமான் ரத் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் ஜீஷான் அலி 23 ரன், அன்ஷுமான் ரத் 48 ரன் அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து நிஜகத் கான் மற்றும் யாசிம் முர்தாசா ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய நிஜகத் கான் அரைசதம் அடித்து அசத்தினார்.
இறுதியில் ஹாங்காங் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்துள்ளது. ஹாங்காங் தரப்பில் அதிகபட்சமாக நிஜகத் கான் 52 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சமீரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி ஆட உள்ளது.