மீண்டும் களத்திற்கு திரும்பும் ஷ்ரேயாஸ் அய்யர்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிட்டார்.;
புதுடெல்லி,
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். ‘ஸ்கேன்’ பரிசோதனை மேற்கொண்ட போது, விலா எலும்பையும் தாண்டி மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஸ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். உடனடியாக ரத்தக்கசிவை தடுப்பதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தான் நலமாக இருப்பதாகவும் தனது நலனுக்காக வேண்டிய அனைவருக்கும் நன்றி என ஸ்ரேயாஸ் அய்யர் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் ஓய்வில் இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர் தவறவிட்டார்.
இந்த நிலையில், அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாட உள்ளார்.
அதற்கு முன் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹாசரே கோப்பை தொடரில் விளையாடுகிறார்.