ஆசிய கோப்பை ஆக்கி: பாகிஸ்தான் அணி விலகல்
பீகாரில் 29-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி விலகி உள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் வரும் 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பான், மலேசியா, ஓமன், சீன தைபே ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மற்றும் அதனைத்தொடர்ந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் கொடுத்த சரியான பதிலடிக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வருமா? என்பதில் சந்தேகம் நிலவியது.
ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு வருவதற்காக விண்ணப்பித்தால் பாகிஸ்தான் அணிக்கு உடனடியாக ‘விசா’ வழங்க இந்தியா தயாராக இருந்தது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றான ஆசிய கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி விலகி இருக்கிறது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி தங்களால் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆசிய ஆக்கி சம்மேளனத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ஆக்கி சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஓய்வு பெற்ற வீரர்களுக்கான லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் (20 ஓவர்) இந்திய சாம்பியன்ஸ் அணி, பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியுடன் விளையாட மறுத்து புறக்கணித்தது. இதனால் எழுந்த சர்ச்சை காரணமாக பாகிஸ்தான் ஆக்கி அணி இந்தியா வந்து விளையாட அந்த நாட்டு அரசு விரும்பவில்லை.
இதனால் பாகிஸ்தான் விலகல் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. பாகிஸ்தான் ஒதுங்கியதையடுத்து ஆசிய போட்டியில் பங்கேற்க வங்காளதேச அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சென்னை மற்றும் மதுரையில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்வது கடினம் தான் என்று கூறப்படுகிறது.
கடைசியாக 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. 6 அணிகள் இடையிலான அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5-வது இடம் பெற்றது.