சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 2வது வெற்றி கண்ட அர்ஜுன் எரிகைசி

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது;

Update:2025-08-10 08:34 IST

கோப்புப்படம்

சென்னை,

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடக்கிறது. இதில் ஓவ்வொரு பிரிவிலும் தலா 10 பேர் பங்கேற்றுள்ளனர். ஓவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 46-வது நகர்த்தலில் அமெரிக்காவின் ராய் ராப்சனை தோற்கடித்தார். இந்த தொடரில் அவர் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இதே போல் விதித் குஜராத்தி (இந்தியா) 61-வது நகர்த்தலில் சக நாட்டவரான நிஹால் சரினை வென்றார்.

மற்ற ஆட்டங்களில் வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), கார்த்திகேயன் முரளியையும் (இந்தியா), அவோன்டர் லியாங் (அமெரிக்கா), ஜோர்டென் வான் பாரஸ்டையும் (நெதர்லாந்து) வீழ்த்தினர். நெதர்லாந்தின் அனிஷ் கிரி- இந்தியாவின் பிரணவ் இடையிலான ஆட்டம் 71-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது. 3-வது சுற்று முடிவில் வின்சென்ட் கீமர் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அர்ஜூன் எரிகைசி 2½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

சேலஞ்சர்ஸ் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீராங்கனை ஆர்.வைஷாலி 62-வது நகர்த்தலில் லியான் லூக் மென்டோன்காவிடம் பணிந்தார். மற்றொரு ஆட்டத்தில் பிரனேஷ் 44-வது நகர்த்தலில் இனியனுக்கு அதிர்ச்சி அளித்தார். ஹரிகா- அதிபன், தீப்தயன் கோஷ்- ஆர்யன் சோப்ரா இடையிலான ஆட்டங்கள் டிரா ஆனது. இன்னொரு ஆட்டத்தில் அபிமன்யு புரானிக், ஹர்ஷ் வர்தனை வீழ்த்தினார். இன்று 4-வது சுற்று ஆட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்