சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: தமிழக வீரர் இனியன் முதல் வெற்றி

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது.;

Update:2025-08-09 07:42 IST

கோப்புப்படம்

சென்னை,

3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடக்கிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பேர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கருப்புநிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 42-வது நகர்த்தலில் நெதர்லாந்தின் ஜோர்டென் வான் பாரஸ்டுடன் ‘டிரா’ செய்தார். மற்றொரு ஆட்டத்தில் விதித் குஜராத்தி (இந்தியா) 54-வது நகர்த்தலில் அமெரிக்காவின் ராய் ராப்சனிடம் தோல்வியை தழுவினார்.

கார்த்திகேயன் முரளி (இந்தியா)- அவோன்டர் லியாங் (அமெரிக்கா), நிஹால் சரின் (இந்தியா)- அனிஷ் கிரி (நெதர்லாந்து) இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இன்னொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், இந்திய வீரர் பிரணவை தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தார்.

சேலஞ்சர்ஸ் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் இனியன், முன்னணி வீராங்கனை ஹரிகாவை எதிர்கொண்டார். இதில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய இனியன் 39-வது நகர்த்தலில் ஹரிகாவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றார். முதல் சுற்றில் அவர், ஆர்.வைஷாலியுடன் டிரா செய்திருந்தார்.

இதே போல் அபிமன்யு புரானிக் 48-வது நகர்த்தலில் லியோன் லூக் மென்டோன்காவை வென்றார். ஆர்.வைஷாலி- அதிபன், ஆர்யன் சோப்ரா- ஹர்ஷ்வர்தன், பிரனேஷ்- தீப்தயன் கோஷ் இடையிலான ஆட்டங்கள் டிரா ஆனது. இன்று 3-வது சுற்று ஆட்டங்கள் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்