புரோ கபடி லீக் ‘பிளே ஆப்’: யு மும்பாவை வீழ்த்தி வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ்
நேற்று நடைபெற்ற பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.;
Image Courtesy: @ProKabaddi
புதுடெல்லி,
12-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் பங்கேற்ற 12 அணிகளும் தலா 18 ஆட்டங்களில் ஆடின. லீக் சுற்று முடிவில் முதல் 8 இடங்களை பிடித்த புனேரி பால்டன், தபாங் டெல்லி, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் ‘பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
உ.பி. யோத்தாஸ், தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய 4 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறின. இந்த போட்டி தொடரின் பிளே-ஆப் சுற்று டெல்லியில் நேற்று தொடங்கியது.
புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வியை தழுவும் அணி, வெளியேற்றுதல் சுற்று மூலம் ஏற்றம் காணும் அணியை 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.
டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற பிளே-ஆப் சுற்று ஆட்டம் ஒன்றில் யு மும்பா - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி, 40-31 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.