உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு


உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சோளிங்கர்,

சோளிங்கர் அடுத்த பாண்டியநல்லூரில் அரக்கோணம் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர். நான் பேசுவதில் எது பொய் என்று கூறினால் பதில் சொல்லத் தயார். விமர்சனத்துக்கு அ.தி.மு.க. தொண்டன்கூட பயப்பட மாட்டான். மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது. அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடுவது வாடிக்கையாகிவிட்டது. எங்கள் ஆட்சியின்போது தி.மு.க. மீது வழக்கு போடவில்லை; மக்கள் பணியாற்றினோம். தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திட்டங்களை கொண்டு வந்தால்தானே நாங்கள் குறை கூற முடியும். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

மூன்று ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு செய்தது என்ன?. 3 லட்சம் கோடி ரூபாய் கடன் மட்டுமே அரசு வாங்கியுள்ளது. விஞ்ஞான ரீதியான யோசனைகளை பயன்படுத்தி விதவிதமான வாக்குறுதிகளை அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றியுள்ளார். கிடைக்கும் நேரத்தில் மக்கள் பணியாற்றுங்கள்.

இந்தியாவிலேயே மக்களை சந்திக்காத ஒரே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்; பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசே வழங்கலாம். நாங்களா ஆளுங்கட்சியாக இருக்குறோம்? எதிர்க்கட்சியாக இருக்கும் எங்களால் எப்படி பிரதமர் மோடியை எதிர்க்க முடியும்?. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story