காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு
![காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு](https://img.dailythanthi.com/Articles/2019/Jan/201901100436157114_loved-Pregnant-Worker-who-refused-marriage-Murder-case_SECVPF.gif)
காதலித்து கர்ப்பிணியாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த தொழிலாளி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்,
திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 22). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளாடைவில் அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது.
இதனையடுத்து அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வானூர் அருகே கொண்டாலக்குப்பம் கிராமத்தில் வாடகை வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் அந்த பெண் கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அரிகிருஷ்ணனிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது.
ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்தார். இதனால் அந்த பெண் அரிகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் சென்று தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அப்போது அவர்கள் அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது..
இதுகுறித்து கோட்டக்குப்பம் மகளிர் போலீசில் கர்ப்பிணி பெண் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அரிகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை வெங்கடாசலம், தாயார் வளர்மதி, தம்பி அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.