மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் மந்திரி டி.கே.சிவக்குமார், குற்றச்சாட்டு


மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் மந்திரி டி.கே.சிவக்குமார், குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 24 Jun 2019 10:30 PM GMT)

மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார் என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாதுவில் புதிய அணைகட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், மேகதாதுவில் புதிய அணைகட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற துறைக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதி இருந்தது.

அதே நேரத்தில் மேகதாதுவில் அணைகட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று கர்நாடக நீர்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வெறும் 5 சதவீதம் மழையே பெய்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இப்படி மழை பெய்யாமல் போகும் என்று நாங்கள் ஒரு போதும் நினைக்கவில்லை. இதில் உள்ள உண்மை தன்மையை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிப்போம்.

அணைகளின் நீர் இருப்பு குறித்து காவிரி ஆணைய அதிகாரிகளே எப்போது வேண்டுமானாலும் கர்நாடகத்திற்கு வந்து ஆய்வு செய்யலாம். அவர்களிடம் எங்களது நிலைமையை எடுத்து கூற தயாராக உள்ளோம். இந்த பிரச்சினையில் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மைசூருவில் எனது காரை கூட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகதாதுவில் புதிய அணைகட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் அரசியல் செய்கிறார். இந்த பிரச்சினை அவரது கழுத்தை நெரிக்கிறது. தமிழக மக்களை திருப்திபடுத்த வேண்டிய நிலையும் அவருக்கு உள்ளது. மேகதாதுவில் புதிய அணைகட்டுவதால் கர்நாடகம், தமிழகத்திற்கு பயன் உள்ளதாகவும் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும்.

அதனால் மேகதாதுவில் அணைகட்டுவதை எதிர்க்க வேண்டாம் என்று தமிழக மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story