நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி; ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையையும் மதுரை ஐகோர்ட்டு நீக்கியது


நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி; ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையையும் மதுரை ஐகோர்ட்டு நீக்கியது
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 8:09 PM GMT)

நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க விதித்த தடையை நீக்கியும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அதே கல்லூரியின் உதவிப்பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்கள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. இதில் உள்நோக்கம் உள்ளது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நியாயமாக விசாரிக்காமல் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலரை தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் தங்களது விசாரணையை நடத்தியுள்ளனர். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடைவிதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

மேலும் இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘‘நிர்மலாதேவி மீதான குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை. மேலும் அந்த மாணவிகளிடம் யாருக்காக நிர்மலாதேவி பேசினார் என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு அரசு தரப்பில், ‘‘வழக்கு விசாரணை முறையாக நடந்து வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.

இந்தநிலையில் அந்த வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்தனர்.

அதில், ‘‘நிர்மலாதேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளதால் இந்த கோர்ட்டு தலையிட வேண்டியதில்லை. மேலும், சாட்சிகளின் அடிப்படையில் கூடுதலாக குற்றவாளிகளை சேர்க்க இந்த வழக்கை விசாரிக்கும் கீழ்கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நிர்மலாதேவி வழக்கை விசாரிக்க கீழ்கோர்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story