மீன் தொழில் நிறுவனங்கள் மீதான ஜி.எஸ்.டி.யை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்


மீன் தொழில் நிறுவனங்கள் மீதான ஜி.எஸ்.டி.யை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:46 PM GMT)

மீன் தொழில் நிறுவனங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து சின்னமுட்டம், குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமுட்டத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இங்கு பிடித்துவரப்படும் சிறிய ரக மீன்கள் கோழி தீவனம் தயாரிக்க அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்தநிலையில் மீன்அரவை ஆலை மற்றும் மீன் தொழில் நிறுவனங்கள் மீது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த துறைமுகத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரமாக கொண்டுள்ள சுமார் 1 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம்

எனவே, மீன் அரவை ஆலை மற்றும் மீன் தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரியை கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர் சங்கம், கோழித்தீவனம் மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று சின்னமுட்டத்தை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

இதனால், விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மீன் ஏல கூடத்தில் மீனவர்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், கோழி தீவன மீன் வியாபாரிகள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்துக்கு கோழி தீவன மீன் வியாபாரிகள் சங்க தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் ரஞ்சித், தலைவர் வானவில் சகாயம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கன்னியாகுமரி பங்கு பேரவை துணைத்தலைவர் நாஞ்சில் மைக்கேல், விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குளச்சல்

இதுபோல், குளச்சலில் விசைப்படகு மீனவர்கள், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள் நேற்று அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் மீன்கள் ஏலம் விடப்படவில்லை. இதனால் படகுகளில் பிடித்து வரப்பட்ட மீன்கள் ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், செயலாளர் பிராங்கிளின், துறைமுக வியாபாரிகள் மற்றும் ஏலக்காரர்கள் சங்க தலைவர் வர்கீஸ் ஆகியோர் கூறும் போது, மீன் தொழில் நிறுவனங்கள் மீதான ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வலியுறுத்தி தற்போது அடையாள வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Next Story