தமிழ்நாடு தின விழாவை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் சீமான் பேட்டி


தமிழ்நாடு தின விழாவை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 2 Nov 2019 11:15 PM GMT (Updated: 2 Nov 2019 6:52 PM GMT)

தமிழ்நாடு தின விழாவை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்று தஞ்சையில், சீமான் கூறினார்.

தஞ்சாவூர்,

ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் அவர்களது மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாடு தின விழா தமிழகத்தில் இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது வரவேற்கத்தக்கது. இந்த விழா, ஆண்டுதோறும் கொண்டாடப்பட வேண்டும்.

தமிழகத்தில் பல இடங்களில் கடைகளின் பெயர், விளம்பர பலகைகளில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக தாம்பரம் என்ற இடத்தை குறிப்பதற்கு முதலில் ஆங்கிலத்தில் பெரிய அளவில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் தமிழை இரண்டாவதாக மிக சிறிய அளவில் எழுதி வைத்துள்ளனர். இதுபற்றி கேட்டால் வடமாநிலத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்வதற்காக அப்படி எழுதி வைத்ததாக கூறுகிறார்கள்.

நிறைவேற்றவில்லை

டெல்லியில், தமிழர்கள் ஏராளமானோர் வசிக்கிறார்கள். அங்குள்ள வழிகாட்டி பலகையில் தமிழ் மொழியை பெரிய அளவில் எழுதிவைப்பார்களா? மாட்டார்கள்தானே. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை?. வெளிநாடுகளுக்கு சென்றால் அங்குள்ள தாய்மொழிக்கு தான் முக்கியத்துவம் அளிப்பார்கள்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சட்டத்தில் வழிகாட்டி, விளம்பர பலகை, இடத்தை குறிக்கும் பலகை ஆகியவற்றில் தாய் மொழியான தமிழ் மொழியை முதலில் பெரிய எழுத்தாகவும் அதற்கு அடுத்தபடியாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், இந்த சட்டத்தை இதுவரை ஆண்ட கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நிறைவேற்றவில்லை. தற்போது ஆட்சி நடத்திவரும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

வரவேற்கத்தக்கது

கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் தமிழகத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. முன்பெல்லாம் பெங்களூருவில்தான் காட்சிக்கு வைப்பார்கள். தற்போது இங்கேயே அதனை செய்வது பாராட்டுக்குரியது. ஏனென்றால் வருங்கால சந்ததியினருக்கும் தொல்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும்.

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை, சாதி பெயரை சொல்லி கொண்டாடுவதை விட நம் இனத்தின் பேரரசர் என்று கொண்டாட வேண்டும். அப்போதுதான் நம் தமிழினத்தின் ஒற்றுமை சிறந்து விளங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story