”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு


”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 July 2018 8:21 AM GMT (Updated: 6 July 2018 8:21 AM GMT)

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது. #OneNationOneElection #AIADMK

புதுடெல்லி, 

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

அதிமுக கடும் எதிர்ப்பு

இந்த நிலையில், ”ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஜூன் 29 ஆம் தேதி சட்ட ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் எழுதிய கடிதத்தில் இந்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது எனவும் அதிமுக தெரிவித்து உள்ளது.  நாளை நடைபெறும் சட்ட ஆணையம் கூட்டத்தில் அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, 2015 -ஆம் ஆண்டு  ஒரே நாடு,  ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அதிமுக அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 


Next Story