குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு


குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 March 2019 6:30 PM GMT (Updated: 18 March 2019 5:56 PM GMT)

குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி வீட்டில் ரூ.5 லட்சம் நகை, பணம் திருடப்பட்டது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த 1996-97-ல் முதல்-மந்திரியாக இருந்தவர் சங்கர்சின் வகேலா. இவரது வீடு காந்திநகரின் புறநகர் பகுதியான பெதப்பூரில் உள்ளது. சொகுசு மாளிகை போல அமைந்திருக்கும் இந்த வீட்டில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் நேபாளத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இந்த நிலையில் வகேலாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை மாயமானது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வகேலா வீட்டில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த ஒரு தம்பதிதான் இந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அவர்கள் தாய்நாடு திரும்பிய நிலையில் அப்போதே இந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெதப்பூர் போலீசில் தற்போது புகார் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story